செவ்வாய், 3 மே, 2011

வெங்காய அறிவு என்றால் என்ன?

எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே, "வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள்.

ஆகவே விதை வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.

------------------ தந்தைபெரியார் - "விடுதலை" 21-9-1973

உழைப்பாளி யார் ?

துன்பமோ, சோதனையோ, பூகம்பமோ, சுனாமியோ அனைத்தையும் நாங்கள் எதிர்கொள்வோம். ஏனெனில், ஜப்பானியர்கள் என்கிற எங்களுக்கு "உழைப்பாளிகள்" என்கிற பேரும் உண்டு.

பெரியார். . . .யார் ?

அங்கீகாரம் பெற்ற கட்சிகள் முதல், அ,ஆ கற்கும் கட்சிகள்வரை அனைத்து கட்சிகளும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. அது என்னவெனில், பெரியாரின் படத்தை, கட்சி தலைவரின் படத்திற்கு பக்கத்தில் பயன்படுத்திக் கொள்வதுதான். எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரே மனிதர் பெரியார்தான். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது, அதனால், அரசியலே வேண்டாம் என தன் இயக்கத்தை கடைசி வரை அரசியலில் கலக்க வில்லை.
பெரியார் ஒரு கடவுள் மறுப்புவாதி என்பதை மட்டுமே பிரபலப்படுத்தி, அவரின் மற்ற போராட்டங்களை பல மக்கள் மறந்து விட்டனர் (அ) மறக்கடிக்கப் பட்டனர். அய்யா ! அரசியல்வாதிகளே, உங்கள் சுயநல நாடகத்தை, குணம் மாறும் கூத்துக்களை, பேரம் பேசும் வியாபாரத்தை, எங்களிடம் திருடும் பணத்தில் எங்களுக்கே பிச்சை போடுவதை என எதை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள். தயவு செய்து, அவரின் படத்தை மட்டும் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், நீங்கள் சொல்லாத பெரியாரின் மேன்மையை,தியாகத்தை எங்கள் சந்ததியினர் தங்கள் பாட புத்தகத்திலாவது உண்மையாக தெரிந்துக் கொள்ளட்டும். அவரையும் அரசியல்வாதியாக மாற்றி விடாதீர்கள்.

இப்படியும் கொள்ளை அடிக்கலாம்

தமிழக அரசு விளம்பரங்கள் 10 விநாடிக்கு பணம் கொடுக்கப்படும் விகிதம் - கலைஞர் டிவி க்கு – ரூ.9700/- , சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள் 3-4 நிமிடங்கள் அளவிற்கு
கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும்,
ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. அரசு செலவில் இப்படி முதல்வரும்,
துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து
வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை. அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில்,
இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி
இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள். கலைஞர் தொலைக்காட்சியின்
பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர். அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்
இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?

சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு
பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?) அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ? எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.