சனி, 2 ஜூலை, 2011

எது அறிவு ?


பகுத்தறிவு என்பது யாரும் கற்று கொடுத்து வருவதல்ல.
ஒருவன் ஒரு செயலை,பொருளை ஏன், எதனால், எப்படி என சிந்திக்க ஆரம்பித்தாலே அவன் அறிவு தெளிந்து பகுத்தறியும் திறன் வந்துவிடும்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு இதுதான் அப்பா, இதுதான் அம்மா, இதுதான் மாமா, இதுதான் ஆயா, இது (மட்டும்)தான் கடவுள் என பழக்கப் படுத்தப்படுகிறார்கள்.
மேலும், காலையில் எழுந்தவுடன் பல் விளக்கு, கழிவறைக்குச் செல், குளி என்பதுபோல கடவுளை வணங்குவதையும் பழக்கப்படுத்தும்போது, அந்த குழந்தை 50 வயதானாலும் அதே மாதிரிதான் செய்வான். அந்த பழக்கம் குணத்தில் ஊறிப் போய்விடும்.

எது சரி, எது முட்டாள்தனம் என்ற சிந்தனை தோன்றாத குழந்தை பருவத்திலேயே, மூட நம்பிக்கையை பழக்கப்படுத்துவதினால், அவனாக தன் அறிவை கொண்டு சிந்திக்காதவரை,அவன் தன் ஆயுள் வரை மூடனாகதான் இருப்பான். இடையில் எவரேனும் எடுத்துச் சொன்னால் கூட புரிந்துக் கொள்ள முடியாத முட்டாளாகதான் வாழ்வான். மூடனாய் பார்த்து திருந்தாவிட்டால், முட்டாள்தனத்தை ஒழிக்க முடியாது.

நம் நாட்டில் உண்மையான நாத்திகர்கள் 1% என்றால், மீதி 99% , அது எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் ஆத்திகர்கள்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்த 99% கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் வாழும் நாட்டில் ஏனய்யா இவ்வளவு பிரச்சினை, சண்டை, கலவரம் ?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அடுத்தவனை ஏமாற்றாமல், அடுத்தவனுக்கு தீங்கு செய்யாமல், முக்கியமாக ஊழல்(லஞ்சம்) செய்யாதவன் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறீர்கள்?

இந்த நாட்டிலுள்ள 1% நாத்திகர்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு போய்விடுகிறோம். அதன் பிறகாவது உங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் வாழ முடியுமா?

உங்கள் கடவுள் (மூட) நம்பிக்கையால் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை., கேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் மனிதப் பிறவிக்கு தேவை ! அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்க்கு ஆண்டவன் தேவையில்லை.

நம் நாட்டில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமை இல்லை., எத்தனை அறிவுள்ள திறமைசாலிகள் உள்ளனர் என்பதில்தான் பெருமை !
1000 முட்டாள்களை விட, 5 புத்திசாலிகள் இருந்தாலே
நாடும், நம் வாழ்வும் மேன்மை அடைந்து விடும்.
அப்படிப்பட்டவர்களைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,
பெரியார் காலத்திலிருந்தே...!